நிவர் புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மிகவும் அச்சுறுத்தி வந்த ‘நிவா்’ புயலானது, புதுச்சேரியிலிருந்து 26 கி.மீ. தொலைவு வடக்கே மரக்காணம் அருகே புதன்கிழமை நள்ளிரவு வலிவிழந்து கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தும், மின் கம்பங்கள் முறிந்தும் விழுந்தன. அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அவற்றை சீர் செய்தனர்.
புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நிவர் புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.