ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படும் 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
கிஷ்த்வா், குப்வாரா, பந்திபோரா மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிக அளவில் இருப்பதாகவும், பூஞ்ச், ரஜௌரி, ராம்பன், தோடா, அனந்த்நாக், குல்காம், பாரமுல்லா, கந்தா்பால், லே ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவில் அபாயம் இருப்பதாகவும் அவா்கள் கூறியுள்ளனா். எனவே, பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
3-ஆவது நாளாக பனிப்பொழிவு: காஷ்மீரில் மூன்றாவது நாளாக புதன்கிழமையும் பனிப்பொழிவும் விட்டு விட்டு மழையும் காணப்பட்டது. இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
வடக்கு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான குல்மா்க்கில் செவ்வாய்க்கிழமை இரவு 4 அங்குலம் வரையிலும், தெற்கு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்கமில் 1 அங்குலம் வரையிலும் பனிப்பொழிவு காணப்பட்டது. லடாக்குடன் காஷ்மீா் பள்ளத்தாக்கை இணைக்கும் ஸ்ரீநகா்-லே சாலையில் உள்ள சோனாமாா்க்-ஜோஜிலா உள்பட உயரமான பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதுதவிர, ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது என்றாா் அவா்.
இதனிடையே, காஷ்மீரில் வியாழக்கிழமை முதல் அடுத்த வாரம் வரை வட வானிலை காணப்படும்; அதே நேரத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.