கேவாடியா; ஒரு சில மாதத்துக்கு ஒரு முறை நாட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தில் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் தற்போதைய தேவை ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தற்போது இந்தியா பயங்கரவாதத்தை புதிய கொள்கை மற்றும் புதிய முறையில் எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் என்பது இந்தியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகும், அதனை நாடு ஒருபோதும் மறக்காது.
நாட்டின் தற்போதைய தேவையாக ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதாக உள்ளது. இது வெறும் விவாதத்துக்குரியதாக மட்டுமல்லாமல், நாட்டின் முக்கியத் தேவையாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.
ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டேயிருக்கிறது. இதனால் நாட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.