வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் நிவர் புயலால் கர்நாடக மாநிலத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆயவு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர புயலான நிவர் புயல் தமிழகத்தின் வங்கக் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்து வடமேற்கு திசையை நோக்கி தரைப் பகுதியில் நகர்ந்து வருகிறது. இதனால் அதிதீவிரப் புயல் வலுவிழந்து புயலாக மாறியுள்ளது.
எனினும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பெங்களூருவின் உள்பகுதிகளிலும், கோலார், சிக்கபல்லப்பூர், மாண்டியா, ராம்நகர் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.