பிரபல கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டியாகோ மரடோனா மறைவையொட்டி கேரள விளையாட்டுத் துறையின் சார்பில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்தார்.
கால்பந்து ஜாம்பவானான மரடோனாவிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், வீட்டில் சிகிச்சையில் இருந்த மரடோனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார்.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மரடோனா, நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது மறைவு கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மரடோனாவின் மறைவையொட்டி மாநில விளையாட்டுத் துறையின் சார்பில் வியாழக்கிழமை முதல் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் இ.பி.ஜெயராமன் அறிவித்தார்.
மரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்த அவர் கேரளாவில் உள்ள லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள் அவரின் மறைவை நம்ப முடியாமல் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபரில் மரடோனா கேரள மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.