இந்தியா

தங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை காவலில் விசாரிக்க சுங்கத் துறைக்கு அனுமதி

DIN

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி எம். சிவசங்கரை 5 நாள்கள் காவலில் விசாரிக்க சுங்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.
கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதரகத்தின் பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கடந்த ஜூலை 5ஆம் தேதி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். 
இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியரும் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவருமான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 15 பேரை சுங்கத் துறையினர் கைது செய்தனர். 
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை, சுங்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவை தனித்தனியே விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில், கேரள முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் 5ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவரை அத்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது.
இதனிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் அவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளதாகக் கூறி, அவரைக் கைது செய்ய அனுமதி கோரி சுங்கத் துறை சார்பில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த திங்கள்கிழமை (நவ. 23) விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவரைக் கைது செய்ய சுங்கத் துறைக்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, சிவசங்கர் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்று, அவரைக் கைது செய்வதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எர்ணாகுளத்தில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சுங்கத் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  அதில், தங்கம் கடத்தல் குறித்து சிவசங்கருக்கு தெரியும் எனவும், கடத்தலுக்கு அவர் உதவியதாகவும் விசாரணையின்போது ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை கூடுதல் தலைமைக் குற்றவியல் மாஜிஸ்திரேட் (பொருளாதாரக் குற்றங்கள்) விசாரித்து, சிவசங்கரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க சுங்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT