வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தில்லி காவல்துறையினரின் வாகன சோதனையால் தில்லி - நொய்டா எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று ஹரியாணா எல்லையான தில்லி - குருகிராம் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி சாலோ என்ற பெயரில் பஞ்சாபிலிருந்து பேரணியாகச் சென்று தலைநகரில் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். எனினும் பஞ்சாப் - ஹரியாணா எல்லைப் பகுதியான அம்பாலாவில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு தில்லி காவல்துறை அனுமதியளிக்காத நிலையில், அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்தும் பொருட்டு எல்லைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், உத்தரப்பிரதேச எல்லையான தில்லி - நொய்டா சாலையிலும், ஹரியாணா எல்லையான தில்லி - குருகிராம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.