புது தில்லி: கரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடமிருந்து அபராதத் தொகையை ரொக்கமாக வசூலிப்பதை தவிர்க்கலாம் என்று தில்லி அரசுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒரு இணையதளத்தை உருவாக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வெறும் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று விதிமுறை வகுத்திருக்கும் தில்லி அரசு, அதனை நடைமுறைப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்றும், தற்போது தில்லி முழுவதும் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில், ரொக்கப் பரிமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற அபராதங்களை வசூலிக்க இதுவரை இணையதளம் இல்லையென்றாலும், இனி உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
விசாரணையின் போது, நாளொன்றுக்கு 40 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அது குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், ஏராளமான உயிர்களை இழந்த பிறகு, இந்த நடவடிக்கையை எடுக்க நீதிமன்றம் தரப்பில் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டனர்.