மகாராஷ்டிரத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) அரசு "இயற்கைக்கு மாறான கூட்டணி' என பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
சோலாப்பூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபட்னவீஸ் கூறியதாவது:
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளடக்கிய கூட்டணி போன்ற கொள்கைக்கு மாறான கூட்டணிகள் ஆட்சி தேசிய அளவிலோ, மாநிலங்களிலோ நீண்ட காலத்துக்கு நீடித்ததில்லை. எனவே, மகாராஷ்டிரத்தை ஆளும் எம்விஏ அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. இது இயற்கைக்கு மாறான கூட்டணி. இந்த கூட்டணி நீண்ட நாள்களுக்கு நீடிக்கப் போவதில்லை. இது விரைவில் முடிவுக்கு வரும். இந்த கூட்டணி முடிவுக்கு வரும் நாளில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு வலுவான அரசை நாங்கள் ஏற்படுத்துவோம். அதுவரையிலும் நாங்கள் வலுவான நேர்மையான எதிர்க்கட்சியாக நீடிப்போம் என்றார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றப்பின் மகாராஷ்டிரத்தில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதனை மறுத்து பதிலளித்த ஃபட்னவீஸ், "நாங்கள் மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஒரு வலுவான எதிர்க்கட்சியின் பங்கு என்னவோ அதனை நேர்மையாக செய்து வருகிறோம் என்றார்.