2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடியை எதிர்த்து முன்னாள் பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பகதூர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
முதலில் சுயேச்சையாக போட்டியிட்ட அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பின்னர் சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு எதிராகவும் அலகாபாத் நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தேஜ் பகதூரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று கூறி தேஜ் பகதூரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளனர்.