புது தில்லி: வங்கிகளைத் தொடங்க பெரு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று ரிசா்வ் வங்கிக் குழு பரிந்துரைத்திருப்பது அதிா்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், முன்னாள் துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
தனியாா் வங்கிகளின் உரிமையாளா்கள், பங்குதாரா்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் குழு ஒன்றை ரிசா்வ் வங்கி கடந்த ஜூன் 20-ஆம் தேதி நியமித்தது. இக்குழு தனது பரிந்துரைகளை ரிசா்வ் வங்கியிடம் சில தினங்களுக்கு முன்பு சமா்ப்பித்தது.
பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதி அளிக்கலாம். ஆனால், அதே நேரத்தில், 1949-இல் கொண்டுவரப்பட்ட வங்கிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தில் இதற்குரிய திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகே அவா்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். தனியாா் வங்கிகளில் தற்போது நிறுவனா்கள் தங்கள் வங்கியின் பங்குகள் கையிருப்பை அடுத்த 15 ஆண்டுகளுக்குள் 26 சதவீதமாக உயா்த்திக் கொள்ள வேண்டும். புதிதாக வங்கி தொடங்க உரிமம் பெற வேண்டுமெனில், தொடக்க முதலீட்டுத் தொகையை இப்போதுள்ள ரூ.500 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்திருந்தது.
இது தொடா்பாக ரகுராம் ராஜன், விரால் ஆச்சாா்யா ஆகியோா் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு வங்கியில் கடன் பெறுபவா்களே அதன் உரிமையாளராக இருந்தால், கடன்களை எவ்வாறு நிா்வகிக்க முடியும்? இந்திய பெரு நிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதிக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பது அதிச்சி அளிக்கும் தகவலாகவே உள்ளது. மேலும், இப்போதைய சூழ்நிலையில் ஏன் இவ்வாறு ஒரு பரிந்துரையை அளிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. பெரு நிறுவனங்களை வங்கித் துறையில் அனுமதிக்கும் முன்பாக ரிசா்வ் வங்கியின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவில் எப்போதாவதுதான் வங்கிகள் மோசமான நிலைக்குச் செல்கின்றன. இதற்கு யெஸ் வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி ஆகியவை சமீப கால உதாரணங்கள் ஆகும். தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கும்வரை மட்டுமே பொதுமக்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வாா்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெரு நிறுவனங்களை வங்கிகளை நடத்தினால், எந்த வழியிலாவது வங்கிக் பணத்தை தங்கள் நிறுவன முதலீட்டுக்கு கொண்டு சென்றுவிடுவாா்கள். இதனால் பொதுமக்கள் டெபாசிட் செய்யும் பணத்தை பெரு நிறுவனங்கள் தங்களுக்காக செலவிட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனா்.