ஹைதராபாத்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மீது கவனம் செலுத்த இந்தியாவின் அயராத முயற்சிகள் உதவின; மேலும், சர்வதேச பயங்கரவாதத்தின் உலகளாவிய தன்மை குறித்து உலகம் படிப்படியாக அறிந்து வருகிறது என்றார் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.
"இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' சார்பில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது: பயங்கரவாதத்துக்கான நிதி, ஆள் சேர்ப்பு போன்ற தொடர்புடைய அம்சங்களை வெளிக்கொண்டு வருவதற்கு நமது அயராத முயற்சிகள் உதவின. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஓர் அரசு ஆதரவு அளிப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) திகழ்கிறது.
இந்தியாவின் வந்தே பாரதம் திட்டத்தின் மூலம், கரோனா முழு அடைப்பு காலகட்டத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து நமது நாட்டைச் சேர்ந்த 24 லட்சம் பேர் தாய் நாடு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவரை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பவும் இந்தியா உதவியுள்ளது. இதன் நோக்கம் எளிமையானது, இன்றைய இந்தியா எந்த ஓர் இந்தியரையும் வெளிநாட்டில் தவிக்கவிடாது.
கரோனா தொற்றுநோய் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பல பாடங்கள், வரும் நாள்களில் பிரதிபலிக்கும். பொருளாதார மீட்சிதான் நாட்டின் உடனடி கவனமாக இருந்தது. செப்டம்பர் மற்றும் அக்டோபருக்கான பொருளாதாரக் குறியீடுகள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. கரோனாவுக்கு பின்னரான மருத்துவ உபகரணங்களைப் பொருத்தவரை நாட்டில் தற்போது 15 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. 7 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன. நெருக்கடியான தருணத்துக்கு இந்தத் திறனை எடுத்துச் செல்வதும், வழக்கமான நடைமுறையாக இதை மாற்றுவதுமே இப்போது உள்ள சவால் ஆகும் என்றார் அவர்.