சிந்த்வாரா: மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல் நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் ஆகியோரை காணவில்லை என்றும் அவர்களைப் பற்றி துப்புக் கொடுத்தால் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சிந்த்ராவா பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிந்த்வாரா பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் கமல் நாத், இதே நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. யாகியிருப்பவர் அவரது மகன் நகுல் நாத்.
இதுபோன்ற ஒரு மோசமான சூழ்நிலையில், சிந்த்வாரா எம்எல்ஏ மற்றும் எம்.பி.க்களை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தேடுவதாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.21 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் சில விஷமிகள் போஸ்டர் அடித்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.