மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 1,001 காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், காவலர்கள், துப்பரவு பணியாளர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அயராது கரோனாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த 1,001 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். இதில், 851 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 142 காவலர்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை காவல்துறை ஊழியர்கள் மீது 218 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதற்காக 770 பேர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, 25,922 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5,547 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 975 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.