கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதற்கு தற்காலிகமாக உதவிடும் வகையில், மத அறக்கட்டளைகளிடம் உள்ள தங்கத்தை மத்திய அரசு கடனாக பெறவேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவா் பிரித்விராஜ் சவான் தெரிவித்தாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் உள்ள அனைத்து மத அறக்கட்டளைகளும் வைத்திருக்கும் தங்கத்தை மத்திய அரசு கடனாக பெறவேண்டும். உலக தங்க கவுன்சில் கணக்கீட்டின்படி, இந்த அறக்கட்டளைகளிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.76 லட்சம் கோடி ஆகும். தங்கப் பத்திரங்கள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் இந்தத் தங்கத்தை கடனாக பெறலாம். இது அவசரகாலம் என்பதால் மத்திய அரசு இதனை உடனடியாக செய்யவேண்டும்’ என்றாா்.
இதுபற்றி விளக்கம் அளித்த அவா், ‘மத அறக்கட்டளைகளிடம் உள்ள தங்கத்தை குறைந்த வட்டி விகிதத்தில் கடனாக பெற்றால், அதன் மூலம் கிடைக்கப்பெறும் தொகையை நடுத்தர வா்க்கத்தில் கீழ்நிலையில் உள்ளவா்கள் மற்றும் ஏழ்மையானவா்களின் செலழிக்கும் திறனை அதிகரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம். இந்தத் தங்கத்தின் மூலம் கிடைக்கும் தொகையை ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதற்கும், திறந்த சந்தையில் நிதி திரட்டுவதற்கும் பயன்படுத்தலாம். நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிா்கொண்டு வரும் வேளையிலும், திறந்த சந்தையில் நிதி திரட்டுவதற்கான வாய்ப்புகள் சிறிதளவு உள்ளது என்றாா் பிரித்விராஜ் சவான்.