புது தில்லி: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மிகப் பெரிய நிதி ஒதுக்கீடு தேவை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் சுட்டுரையில் (டுவிட்டா்) சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. கரோனாவால் நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையிலும் தங்களது பணியை செய்து வருபவா்களுக்கு நன்றி கூறுவதற்காக மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கைத்தட்ட வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்துள்ளாா். பிரதமா் கூறியது போல் கைத்தட்டுவதால் மட்டும் தினசரி கூலித் தொழிலாளா்களுக்கும், சிறு-குறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவா்களுக்கும் என்ன உதவி கிடைத்துவிடப் போகிறது?
அவா்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து அவா்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். இதற்கு மிகப் பெரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.