இந்தியா

வளர்ச்சிப் பாதையில் உ.பி.: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

DIN

உத்தரப் பிரதேசத்தை நம்பிக்கை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றுடன் வளர்ச்சிப் பாதையில் பாஜக அரசு அழைத்துச் செல்கிறது என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 


உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்த முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார். இதையொட்டி லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: 


உத்தரப் பிரதேச அரசின் மீதான மாநில மக்களின் அபிப்ராயத்தை பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளில் மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவினால் நம்பிக்கை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றுடன் வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை பாஜக அரசு அழைத்துச் செல்கிறது. 


மத்திய அரசின் திட்டங்களான பிரதமர் வீடு கட்டும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம், மானிய விலையில் எரிவாயு இணைப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தியதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 


சுமார் 24.56 கோடி பேர் கலந்துகொண்ட கும்பமேளா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். அந்த நிகழ்ச்சி உலகிலேயே தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கான உதாரணமாக உள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில், முந்தைய ஆட்சிகளின்போது சட்டம்}ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தது. 


ஆனால், பாஜக ஆட்சியில் மாநிலத்தில் சட்டம்}ஒழுங்கு மேம்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் எந்தவொரு கலவரமும் ஏற்பட்டதில்லை. குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 


இதற்கு முன்னர் குறிப்பிட்ட சில துறைகளில் மிகவும் பின்தங்கியிருந்த நமது மாநிலம், தற்போது பாஜக அரசின் முயற்சியால் அந்தத் துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெண்களைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுப்போரை கண்காணிக்க தனி ரோந்துப் படை அமைக்கப்பட்டுள்ளது. 


பூர்வாஞ்சல் விரைவுச்சாலை கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த சாலை மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


புந்தேல்கண்ட் விரைவுச்சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக அந்தப் பணிகள் நிறைவடையும். 


மீரட்-அலாகாபாத் இடையேயான கங்கை விரைவுச்சாலை பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று விரைவுச்சாலைகளும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்க இருக்கின்றன. மாநிலத்தில் புதிதாக 12 விமான நிலையங்களை அமைப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. 


ஜெவார் சர்வதேச விமான நிலையமானது அதிக அளவிலான வேலை வாய்ப்புகளையும், சர்வதேச அளவில் உத்தரப் பிரதேசத்துக்கென தனி அங்கீகாரத்தையும் அளிக்கும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT