நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தில்லியில் துணை மருத்துவ மாணவி "நிர்பயா', கடந்த 2012-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முகேஷ் குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கான சட்ட வாய்ப்புகள் மற்றும் கருணை மனு வாய்ப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன.
எனினும், அவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவர்களுக்கான தண்டனையை வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திகார் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.