கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக தில்லி அரசு 230 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்து தயாராக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 31 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள். எனவே, இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அதேசமயம், தில்லி அரசும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவிக்கையில்,
"கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ள 19 அரசு மருத்துவமனைகள் மற்றும் 6 தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் மற்றும் சிறப்பு படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தவிர்க்கலாம்.
மருத்துவர்களுக்கும், மருத்துவ நிர்வாகிகளுக்கும் மட்டுமே முகக்கவசம் கட்டாயமாகும். இருமல், காய்ச்சல், சளி உள்ளிட்டவை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம்" என்றார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மார்ச் 31-ஆம் தேதி வரை தில்லியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் கூடுவதை சில நாட்களுக்குத் தவிர்க்குமாறும் தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.