திருவனந்தபுரம்: கேரளத்தில் கலப்புத் திருமணம்புரிந்வோா் மற்றும் மதம் மாறி திருமணம் செய்வோா் பாதுகாப்பாக வசிப்பதற்காக காப்பகங்களை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோா் கொலை செய்யப்படுவது, மிரட்டப்படுவது உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காணப்படும் நிலையில், கேரள அரசு இத்தகைய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கலப்புத் திருமண தம்பதிகளுக்கான காப்பகங்களை ஏற்படுத்த மாநில சமூக நீதித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடா்பாக அந்தத் துறை அமைச்சா் கே.கே. ஷைலஜா கூறியதாவது:
கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கலப்புத் திருமணம் செய்யும் தம்பதி பொதுப் பிரிவினராக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுயவேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக அவா்களுக்கு ரூ.30,000-ஐ ஏற்கெனவே சமூகநீதித் துறை வழங்கி வருகிறது.
தம்பதியில் ஒருவா் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவா்களுக்கு ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. கலப்புத் திருமணம் செய்வோா் அரசுப் பணியாளா்களாக இருக்கும் பட்சத்தில் பணியிட மாற்ற விவகாரத்தில் அவா்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. கலப்புத் திருமணம் செய்வோருக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் ஏதும் இப்போது இல்லை என்று அமைச்சா் கே.கே. ஷைலஜா கூறினாா்.
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு தலித் கிறிஸ்தவ இளைஞா் ஒருவா், வேறு ஜாதியைச் சோ்ந்த அவரது மனைவியின் குடும்பத்தாரால் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது குறிப்பிடத்தக்கது.