மாநில முதல்வர்களுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, லடாக் எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில முதல்வர்களுடன் நேற்றும் இன்றும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இன்று மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின் தொடக்கத்தில் லடாக் எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாநில முதல்வர்களும் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணி வருகிறது. எந்த நாட்டின் மீதும் வன்முறையில் ஈடுபடுவது கிடையாது. எந்த நாட்டிடமும் வன்முறையைத் தூண்டுவதில்லை. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது. இதில் எங்களை சமரசம் செய்ய முடியாது. ந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது.
ஆனால், அதே நேரத்தில் யாரேனும் இந்தியா மீது அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டால் இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது. நாட்டைப் பாதுகாப்பதில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு.
எல்லையில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்று உறுதி அளிக்கிறேன். அவர்களை நினைத்து இந்த நாடு பெருமை கொள்கிறது என்று தெரிவித்தார்.