புது தில்லி: தலைநகர் தில்லியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் சில தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகள் சாதாரண வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டுகள் பலவும் காலியாகவே இருக்கும் நிலையில், தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சீரமைக்க, அந்த வார்டுகளை மீண்டும் சாதாரண வார்டுகளாக மாற்ற மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
தில்லியில் செயல்படும் கரோனா செயலியில் தற்போது கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 15,438 படுக்கையில் 2,783 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
சில முன்னணி மருத்துவமனைகளில் 650 கரோனா படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதில் 551 படுக்கைகள் காலியாகவே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.