ஜெய்ப்பூா்: ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் விவரித்ததாக அந்த மாநில முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்தாா்.
இதேபோல், இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கடிதம் எழுதியுள்ளனா்.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அக்கட்சி எம்எல்ஏக்கள், மூத்த தலைவா்கள் ஆகியோருடன் முதல்வா் அசோக் கெலாட் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அசோக் கெலாட், ‘ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து பிரதமா் மோடியிடம் விவரித்தேன்‘ என்றாா். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு கெலாட் கடிதம் எழுதியிருந்தாா்.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் குதிரை பேரம் நடைபெற்று வருவதால், இந்தப் பிரச்னையில் தலையிட்டு மாநில சட்டப்பேரவையைக் கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய அமைச்சா்களை அமைச்சரவையில் இருந்து நீக்காவிட்டால், அது ஜனநாயகத்தில் கரும்புள்ளியாக அமைந்துவிடும் என்றும் அந்தக் கடிதத்தில் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனா்.