மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான 5-ம் கட்ட சேவை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2.5 லட்சம் பேர் ஏற்கெனவே இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஆகஸ்ட் 1, 2020 முதல் இதன் 5-ம் கட்ட சேவை தொடங்கப்படவுள்ளது. கூடுதல் விமானங்களை விரைவில் அறிவிப்போம்."
5-ம் கட்டத்தில் அமெரிக்கா, கனடா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர், பிரிட்டன், சவுதி அரேபியா, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ் உள்பட பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவிக்கையில், "ஏற்கெனவே செய்ததுபோல், 5-ம் கட்டத்தில் கூடுதல் இடங்களும், விமானங்களும் இணைக்கப்படவுள்ளன." என்றார்.