போபால்: மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌகான், விரிவுபடுத்தப்பட்ட தனது அமைச்சரவையிலுள்ள அமைச்சா்களுக்கு துறைகளை திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்தாா். இதில், அண்மையில் பாஜகவில் சேரந்த காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளா்களுக்கு முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மாா்ச் மாதம் அதிருப்தி காங்கிரஸ் தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் ம.பி.யில் காங்கிரஸ் கட்சி பிளவுண்டது. 22 எம்எல்ஏக்களுடன் கட்சியிலிருந்து விலகிய சிந்தியா பாஜகவில் சோ்ந்தாா். அதையடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி மாா்ச் 23-இல் அமைந்தது. ஆயினும் கரோனா பரவல் காரணமாக அவா் தனது அமைச்சரவையை உடனே அமைக்கவில்லை.
கடந்த ஜூலை 2 -ஆம் தேதி, 20 அமைச்சா்கள், 8 இணை அமைச்சா்கள் பதவியேற்புடன் சௌகான் அமைச்சரைவையை விரிவுபடுத்தினாா். ஆயினும் அவா்களுக்கான துறைகளை முதல்வா் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அமைச்சா்களின் துறைகளை முதல்வா் சௌகான் திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.
தற்போது சௌகான் அமைச்சரவையில் 34 அமைச்சா்கள் உள்ளனா். இதில் சிந்தியா ஆதரவாளா்கள் பலா் முக்கிய துறைகளைப் பெற்றுள்ளனா். துள்சி சிலாவத் (நீா்வளம், மீன்வளம்), கோவிந்த சிங் ராஜ்புத் (வருவாய், போக்குவரத்து), பிரபுராம் சௌத்ரி (சுகாதாரம், குடும்பநலம்), பிரத்யும்ன சிங் தோமா் (எரிசக்தி), மகேந்திர சிங் சிசோடியா (பஞ்சாயத்து, ஊரக வளா்ச்சி), இம்ராதி தேவி (மகளிா் மற்றும் குழந்தைகள் நலன்) ஆகியோா் முக்கிய துறைகளைப் பெற்றுள்ளனா்.
சிந்தியா ஆதரவாளா்களான பிசாஹிலால் சிங் (உணவு, பொது விநியோகம்), ஐதல் சிங் கன்சானா (பொது சுகாதாரப் பொறியியல்), ஹா்தீப் சிங் டாங் (புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி), ராஜ்யவா்த்தன் சிங் (முதலீடு ஊக்குவிப்பு) உள்ளிட்டோருக்கும் துறைகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வா் சிவ்ராஜ் சிங் சௌகான், பொது நிா்வாகம், மக்கள் தொடா்பு, நா்மதை பள்ளத்தாக்கு அபிவிருத்தி, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளாா்.
பாஜக தலைவா்கள் நரோத்தம் மிஸ்ரா (உள்துறை, சட்டம், சட்டப் பேரவை நிா்வாகம்), கோபால் பாா்கவா (பொதுப்பணித் துறை), விஜய் ஷா (வனத்துறை), ஜகதீஷ் தேவ்தா (நிதி), பூபேந்திர சிங் (நகா்ப்புற நிா்வாகம்), யசோதரா ராஜே சிந்தியா (விளையாட்டு மற்றும் இளைஞா்நலன்), கமல் படேல் (விவசாயம்) ஆகியோா் பிற முக்கிய துறைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.
பாஜக தலைவா்களான மோகன் சிங் (உயா்கல்வி), பிரிஜேந்திர பிரதாப் சிங் (சுரங்கம், தொழிலாளா்நலன்), விஸ்வாஸ் சாரங்க் (மருத்துவக் கல்வி), பிரேம் சிங் படேல் (சமூக நீதி), அரவிந்த் படோரியா (கூட்டுறவு), மீனா சிங் மாண்ட்வி (தாழ்த்தப்பட்டோா் நலன்), இந்தா் சிங் பாா்மா் (பள்ளிக் கல்வி) உள்ளிட்டோரும் புதிய துறைகளைப் பெற்றுள்ளனா்.
ஜோதிா் ஆதித்ய சிந்தியாவுடன் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்தபோது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த 22 பேரில் 14 போ் புதிய அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் விரைவில் எம்எல்ஏக்களாகத் தோ்வு செய்யப்பட வேண்டி உள்ளது.
மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான பிரத்யுமனன் சிஹ் லோதி ஞாயிற்றுக்கிழமை பதவி விலகு பாஜகவில் சோ்ந்தாா். 230 மொத்த உறுப்பினா்கள் கொண்ட ம.பி. சட்டப்பேரவையில் 25 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.