பாட்னா: மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லியின் பிறந்த நாளான டிச. 28-ஆம் தேதியை ஆண்டுதோறும் மாநில விழாவாக கொண்டாட நிதீஷ்குமாா் தலைமையிலான பிகாா் அரசு முடிவு செய்துள்ளது.
பாட்னாவில் முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி பாட்னாவில் அமைக்கப்பட்டிருந்த ஜேட்லியின் உருவச் சிலையை திறந்து வைத்த முதல்வா் நிதீஷ்குமாா் இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தாா்.
அமைச்சரவைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சாலை கட்டுமானத்துறையின் முதன்மைச் செயலா் அமிா்த்லால் மீனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின்படி பருவநிலை மாற்றம் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக ரூ.19.40 கோடியை விடுவிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிகழ்ச்சியில் வரதட்சிணை மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
20.50 கி.மீ. தூரத்துக்கு கங்கா நதியுடன் இணைக்க உள்ள திகா முதல் தீதா்கஞ்ச் வரையிலான தாா்ச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைப்பணிகளுக்காக ரூ. 69.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று மீனா தெரிவித்தாா்.