புது தில்லி: அதிமுக மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா ஞாயிறன்று தில்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
அதிமுக சார்பாக மாநிலங்களவை எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டவர் சசிகலா புஷ்பா. அதிமுகவில் மகளிர் அணியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தவர். இருந்தபோதிலும் ஜெயலலிதாவின் இறுதிக் காலத்தில் அவருடன் உண்டான கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சி பணிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். கடந்த நான்கைந்து மாதங்களாக அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சசிகலா புஷ்பா ஞாயிறன்று தில்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். பாஜக தமிழகப் பொறுப்பாளர் முரளிதர ராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தன்னை பாஜ கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அடுத்த வருடம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியினை வலுப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.