புது தில்லி: கரோனாவுக்கு எதிராக ஃபைஸா் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால தேவைக்கு உபயோகிக்க அனுமதி அளிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகத்திடம் (டிசிஜிஐ) விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை ஃபைஸா் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அளித்துள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
ஃபைஸா் நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால தேவைக்கு உபயோகிக்க கடந்த டிச.4-ஆம் தேதி டிசிஜிஐயிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தில், இந்தியாவில் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன் பின்னா் நாட்டில் தடுப்பூசியை விற்கவும், விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.
எனினும் இந்த தடுப்பூசிகள் அரசு ஒப்பந்தங்கள் மூலமாக மட்டுமே விநியோகிக்கப்படும் என்று ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயான்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி 95% செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.