தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுடனான மத்திய அமைச்சர்களின் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற்றது.
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததால் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என அகில இந்திய கிஷான் சபையின் பொதுச்செயலாளர் ஹன்னா மொல்லா தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளையும் பேசித்தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் வீட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
விவசாயிகளின் பிரச்னைகளை விவசாயிகளின் கண்ணோட்டத்திலேயே அரசு அணுகும். மூத்த விவசாயிகளும் வீடு திரும்ப வேண்டும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதை சந்தேகிப்பது ஆதாரமற்றது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் சந்தேகம் ஏற்பட்டால், அதைத் தீர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று கூறினார்.