புது தில்லி: கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை மக்கள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையாக சிகிச்சை அளிப்பது, அந்நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் உடலை முறையாக அடக்கம் செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இது தொடா்பான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
மேலும் அவா்கள், ‘‘பொது இடங்களில் முகக் கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் மக்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். அதைக் கண்டிப்புடன் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்றனா்.
ஹிமாசல பிரதேசத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதாக எழுந்த புகாா் குறித்தும் விசாரணையின்போது நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதையடுத்து, ஹிமாசல பிரதேசத்தில் காணப்படும் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.