விவசாயிகளுக்கு ஹரியாணா அரசு மிகப்பெரிய தவறை செய்துள்ளதாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.
ஹரியாணா அரசு விவசாயிகளைத் தடுத்திருக்கக் கூடாது, தண்ணீரைப் பீய்ச்சியடித்திருக்கக் கூடாது, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியிருக்கக் கூடாது என்று கூறினார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே பேசிய ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங், ''விவசாயிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மாற்று மதத்தவர்கள் என்பதால் குடியேறிகள் என்று விமர்சிக்கப்படுகின்றனர். விவசாயிகள் விவசாயிகளே. சாதி, மதங்களைக் கடந்த உன்னதமான கோரிக்கைக்காக அவர்கள் தில்லியில் ஒன்றுகூடியுள்ளனர்.
தண்ணீரைப் பீய்ச்சியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தி ஹரியாணா அரசு மிகப்பெரிய தவறிழைத்துள்ளது. விவசாயிகளின் தில்லி நோக்கிய பயணத்தை யாராலும் தடுக்க முடியாது'' என்று கூறினார்.