தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை கனடா தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 6 நாள்களாக தில்லியில் போராடி வருகின்றனர். இது உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதற்கு மத்திய வெளியுறவுத் துறை ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்களில் இவ்வித கருத்துகள் தேவையற்றது எனக் கூறி ட்ரூடோ கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கனடா பிரதமரின் கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கனடா நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்தால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளது.