கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதைப் போன்று கர்நாடகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுதாகர், ''கர்நாடகத்தில் வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேலும், பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கரோனா பரிசோதனைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்'' என்று கூறினார்.