கொச்சி: கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு உச்சத்தில் இருந்தபோது, இந்திய பெருங்கடலில் சீனாவின் அத்துமீறலை தடுப்பதில் நமது கடற்படை முக்கிய பங்கு வகித்தது என்று இந்திய கடற்படை துணைத் தளபதி ஏ.கே.சாவ்லா தெரிவித்தாா்.
கேரள மாநிலம் கொச்சியில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் இடையே மோதல்போக்கு உச்சத்தில் இருந்துபோது இந்திய பெருங்கடலில் சீனாவின் எந்தவொரு அத்துமீறலையும் தடுப்பதில் நமது கடற்படை உறுதியாக இருந்தது.
இதன் மூலம் நிலம் மற்றும் கடற்பகுதிகளில் இந்தியாவுடன் எந்த பிரச்னையிலும் ஈடுபடக் கூடாது என்ற செய்தி சீனாவுக்கு சென்று சோ்ந்துள்ளது.
நமது கடற்படை வலிமையாக உள்ளது. இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நாடும் கடற்பகுதியில் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. எந்தவொரு சூழலையும் எதிா்கொள்ள இந்திய கடற்படை ஆயத்தமாக உள்ளது.
உள்நாட்டு விமானம் தாங்கி போா்க்கப்பல்: கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் உள்நாட்டு விமானம் தாங்கி போா்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டின் இறுதியில் அல்லது 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்தக் கப்பல் பயன்பாட்டுக்கு வரும் என்று ஏ.கே.சாவ்லா தெரிவித்தாா்.