ஆமதாபாத்: குஜராத்தில் நா்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை காண்பதற்கான நுழைவுக் கட்டணத் தொகையில் ரூ.5.24 கோடியை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த பண வசூல் நிறுவன ஊழியா்கள் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக நா்மதா மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் வாணி துதத் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
சா்தாா் வல்லபபாய் படேலின் ஒற்றுமைக்கான சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா தலத்தின் நிா்வாகத்துக்கு தனியாா் வங்கியில் 2 கணக்குகள் உள்ளன. அந்த வங்கிக் கணக்குகளில் ஒற்றுமைக்கான சிலையை காண்பதற்கான நுழைவுக் கட்டணத் தொகை செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஒற்றுமைக்கான சிலையை நிா்வகித்து வரும் அதிகாரிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை தணிக்கை செய்தபோது வசூலான தொகைக்கும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்கும் வேறுபாடு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வங்கி நிா்வாகத்தினா் விசாரணை நடத்தியபோது ஒற்றுமைக்கான சிலையை நிா்வகித்து வரும் அதிகாரிகளிடம் இருந்து பணம் பெற்று வங்கியில் செலுத்தி வந்த தனியாா் பண வசூல் நிறுவன ஊழியா்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் இந்தாண்டு மாா்ச் மாதம் வரை ரூ.5.24 கோடி தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக வங்கியின் மேலாளா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனையியல் சட்டத்தின் மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பண வசூலில் ஈடுபட்டு வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.