மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் அனைத்தையும் செய்யும் என மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
29ஆவது உலக மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு, காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
`மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள், நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் பலமாகவும், உத்வேகமாகவும் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவளிக்க விளையாட்டுத்துறை அமைச்சகம் அனைத்தையும் செய்யும்.
விளையாட்டு வீரர்களுக்கும், மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் இரு தரப்பினருக்கும், ஒரே விதமான பாராட்டு, அங்கீகாரம், பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்குகிறோம்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு முடிந்த அளவு உதவும்படி மாநில அரசுகளுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்.’ இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, மத்திய அரசு எப்போதும், விரைவான உதவி அளிப்பதற்காக பத்ம ஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளைப் பெற்ற விளையாட்டு வீரர் தேவேந்திர ஜஜாரியா நன்றி தெரிவித்தார்.