புது தில்லி: அண்மையில் நடந்து முடிந்த பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் குறைபாடு எதுவுமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில், 1,215 வாக்குச் சாவடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு பதிவான வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணி சரிபார்க்கப்பட்டன.
அவற்றில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கையும் சமமாக இருந்தன.
அதில், எந்த குளறுபடியும், குறைபாடும் இல்லை என்றார் அவர்.
கோவாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு பேரவைத் தொகுதியில் இருந்தும் 5 வாக்குச்சாவடிகளில், பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணி சரிபார்க்கப்படுகின்றன.