கனமழை எச்சரிக்கை காரணமாக கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாம்பன் அருகே 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் வலுவிழந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. புயல் வலுவிழந்தாலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக கேரளத்தில் இடுக்கி, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையமும் நாளை காலை முதல் எட்டு மணிநேரம் வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.