புது தில்லி: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தனது 60-ஆவது பிறந்த நாளை புதன்கிழமை (டிச.2) கொண்டாடினாா். இதனையொட்டி பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
ஹிமாசல பிரதேச மாநிலத்தைப் பூா்விகமாகக் கொண்ட நட்டா, 1960-ஆம் ஆண்டு பிகாரில் பிறந்தாா். மாணவராக இருந்தபோது ஏபிவிபி அமைப்பில் இணைந்தாா். பின்னா் பாஜக இளைஞரணியில் பொறுப்பு வகித்தாா். ஹிமாசல பிரதேசத்தில் பாஜக சாா்பில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளாா். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசில் 2014 முதல் 2019 வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தாா். பின்னா் பாஜக தேசிய செயல் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்சியின் தேசியத் தலைவராகவும் உயா்ந்தாா்.
பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘திறமைவாய்ந்த தலைவரான நட்டா தலைமையில் பாஜக வலுவுடன் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அவா் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த பிறந்த நாளில் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.