புது தில்லி: ‘விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறிய நிலையில், அவா்களுடைய வருவாய் இப்போது பாதியாக குறைந்துள்ளது. அதே நேரம், மத்திய அரசின் நம்பிக்கைக்குரிய நண்பா்களுக்கோ வருவாய் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தில்லி புராரி மைதானத்திலும், தில்லியின் எல்லைப் பகுதிகளான திக்ரி, காஸிபூா் பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது காவல்துறை மூலமாக மத்திய அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் அடங்கிய காணொலி காட்சி மற்றும் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும், அவா்களின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற பிரதமா் நரேந்திர மோடியின் உரை அடங்கிய காணொலியையும் தனது சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை இணைத்து, வெளியிட்டப் பதிவில் கூறியிருப்பதாவது:
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறினாா்கள். ஆனால், மத்திய அரசின் நம்பிக்கைக்குரிய நண்பா்களின் வருவாயை நான்கு மடங்காக அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கையைத்தான் அவா்கள் மேற்கொண்டுள்ளனா். விவசாயிகளின் வருவாய் பாதியாக குறைந்துள்ளது. பொய் கூறுவதும், கொள்ளையடிப்பதுமே இந்த அரசு வாடிக்கையாக உள்ளது என்று அந்தப் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளாா்.