மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பிகார் பேரவைத் தேர்தல் முறையை பின்பற்றி தபால் வாக்களிக்கலாம் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.
இதுதொடர்பாக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு நேரில் சென்று மனு அளித்து, பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்மையில் நடைபெற்ற பிகார் பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகளை அதிகரித்ததால், அங்கு தேர்தல் முடிவுகளின் நிலைமை மாறிவிட்டது. 0.03 சதவீதம் தபால் வாக்குகள் அதிகரித்ததால் ஆட்சியே மாறிவிட்டது. திமுகவும் கடந்த முறை 1.1 சதவீதத்தில் ஆட்சியை இழந்தது. தபால் வாக்குகள் அதிகரிக்கப்பட்டால் போலி வாக்குகள் அதிகரிக்க வித்திடும்.
ஆகையால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பிகார் தேர்தல் முறையைப் பின்பற்றி தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
80 வயதானவர்களுக்கென தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வாக்குரிமை உள்ளதா என்பது குறித்து ஆணையத்தின் தரப்பில் சரிபார்க்க வேண்டும்' என்றார்.