புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், மத்திய அரசுக்கு ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடி வரும் நிலையில், மத்திய அரசுக்கு தனது கடும் கண்டனத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள், தங்களது நண்பர்களின் வருவாயை நான்கு மடங்காக்குகிறார்கள், அதே வேளையில் விவசாயிகளின் வருவாய் பாதியாகக் குறைக்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பொய் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கானது, சூட்டு கோட்டு போட்டவர்களுக்கானது என்று ராகுல் கூறியுள்ளார்.
தனது சுட்டுரைப் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கும் ராகுல், ஊடகம் ஒன்றில், போராடும் விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டும் விடியோவையும் இணைத்துள்ளார்.