கரோனா தடுப்பூசியைப் பெற தயாராகுமாறு அனைத்துத் மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா திங்கள்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை மாநிலத்தில் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் கரோனாவால் இறப்பு ஏற்படுவது மிகவும் குறைந்து வருவதாகத் தெரிவித்தார்.
கரோனா தொற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கு போதுமான சோதனைகள் அவசியம். தொற்றை முன்கூட்டியே கண்டறிவதன் மூலமாக சமூகத்தில் கரோனா பரவலைக் குறைக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் டிசம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னதாக தலைமைச் செயலாளர்கள் அனைவரும் ஒரு கூட்டத்தை நடத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து கரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, அது தொடர்பான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, தடுப்பூசியை அனைத்து மாநிலத்திற்கும் கொண்டு செல்வது உள்ளிட்ட ஒருங்கிணைப்புகளை செய்வதற்கு தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான தகவல்தொடர்புடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.