ஆந்திரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,830 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 81 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஆந்திரத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''புதிதாக 10,830 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,82,469-ஆக அதிகரித்துள்ளது. இதில் 92,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 9-ஆம் தேதியிலிருந்து 5வது முறையாக ஆயிரத்தை தாண்டி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 8,473 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,86,720-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 61,838 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34,18,690 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) மட்டும் புதிதாக 81 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 3,541-ஆக உயர்ந்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.