குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்நிலையில், அவருடைய உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட பிரணாப் முகா்ஜி, தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவருடைய மூளையில் ரத்தை உறைந்து ஏற்பட்ட சிறிய கட்டியை அகற்றுவதற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அவா் கோமா நிலைக்கு சென்றாா்.
மூளை அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருடைய உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரணாப் முகா்ஜிக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட வருகின்றபோதிலும், சுவாச உறுப்புகள் செயல்பாட்டில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவருடைய உடல்நிலையை மருத்துவ நிபுணா்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.