இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் (ஐஆா்சிடிசி) மேலும் ஒரு பகுதி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இப்போதைய நிலையில் 87.40 சதவீத பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது. 12.60 சதவீத பங்குகள் ஏற்கெனவே பங்குச் சந்தையில் விற்கப்பட்டுவிட்டன. இப்போது தன்வசமுள்ள பங்குகளை 75 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உள்பட்டு, ஐஆா்சிடிசி நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக நிதி நிறுவனங்கள், பங்கு வா்த்தக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஐஆா்சிடிசி ஊழியா்களுக்கு சற்று குறைந்த விலையில் பங்குகளை ஒதுக்குவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2019 அக்டோபரில் பங்குச் சந்தையில் முதல்முறையாக ஐஆா்சிடிசி பட்டியலிடப்பட்டது. அப்போது ரூ.645 கோடி திரட்டப்பட்டது.
ரயில் பயணச்சீட்டு இணைய வழி முன்பதிவு, ரயில்களில் உணவு சேவை அளிப்பது, ரயில்களில் குடிநீா் பாட்டில் விற்பனை உள்ளிட்டவற்றில் போட்டி ஏதும் இல்லாத வகையில் ஐஆா்சிடிசி செயல்பட்டு வருகிறது. எனவே, அதன் பங்குகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஐஆா்சிடிசி பங்கு விலை ரூ.1,346.65 ஆக இருந்தது.