கேரளத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (திங்கள்கிழமை) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
"கேரளத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 5 பேர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள். இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 408 ஆகியுள்ளது. இதில் 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் நிலைமை கையைவிட்டு போவதாக இருந்தது. ஆனால், சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்ததன்மூலம், பரவலைக் கட்டுப்படுத்த முடிந்து அந்த நிலையைக் கடந்தோம். உலகளவில் கரோனா இறப்பு விகிதம் 5.75 ஆக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 2.8 மற்றும் 3-க்கு இடையில் உள்ளது. அதுவே கேரளத்தில் 0.58 ஆக உள்ளது. கேரளத்தில் பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.