வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடிக்கு பிரிட்டனில் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடிக்கு (48) வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து
வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடிக்கு பிரிட்டனில் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடிக்கு (48) வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் ஸ்கார்ட்லாந்து யார்டு போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது முதல் அவரது நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவர் மீதான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் 11 முதல் 15-ஆம் தேதிகளில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ஜாமீன் கோரினார். ஆனால், அவர் தாமாக முன்வந்து ஆஜராகாததால் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, நீரவ் மோடி லண்டன் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நீட்டிப்பு முடிவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை சிறையில் இருந்தபடி காணொலி முறையில் அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவருடைய நீதிமன்றக் காவலை அக்டோபர் 17-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரிய வந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக அந்நாட்டுப் பத்திரிகை ஒன்றில் இந்த ஆண்டு தொடக்கத்தில் செய்தி வெளியானது. அதில், லண்டனில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் நீரவ் மோடி வசித்து வருகிறார்; புதிதாக வைர வியாபாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், நீரவ் மோடியின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை தீவிரமாக செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், நீரவ் மோடியை நாடு கடத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன் பிறகு, அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கடந்த  மார்ச் மாதம் ஆணை பிறப்பித்தது. அதையடுத்து, இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நீரவ் மோடியின் கடவுச்சீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் அவர் பிரிட்டனில் இருந்து வேறு நாட்டுக்குத் தப்ப முடியாமல் முடக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com