கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் துபையிலிருந்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தொடர்புடைய தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் துபைக்குச் சென்ற கணவர், அதன் பிறகு இந்தியா திரும்பிவரவில்லை. சில விவகாரங்கள் தொடர்பாக கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. கணவர் அடிக்கடி தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இச்சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கணவர் கட்செவி அஞ்சல் குறுந்தகவல் மூலம் முத்தலாக் அனுப்பியும், பின்னர் தொலைபேசி வாயிலாக முத்தலாக் கூறியும் தன்னை விவகாரத்து செய்ததாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். விவகாரத்து பெறுவதில் தனக்கு விருப்பமில்லை என்று அதில் கூறியுள்ள அவர், தனக்கு வருமானம் ஏதும் இல்லை என்றும், தத்தெடுத்த மகளை தாம் வளர்க்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது கணவருக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது துபையில் இருப்பதால் அவரது கடவுச்சீட்டை முடக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். விசாரணைக்குப் பிறகு, சட்டரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் கூறினர்.