அரசு வேலைவாய்ப்பு: முற்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு கோரி பொது நல மனு தாக்கல்

அனைத்து அரசு வேலைகளுக்கான ஆள்தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பை தளர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


அனைத்து அரசு வேலைகளுக்கான ஆள்தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பை தளர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மகாளிபட்டியைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் வழக்குரைஞர் சி.ஆர். ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 
பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வேலைவாய்ப்புத் தேர்வில் அந்தப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு ஏதும் செய்யாதது இந்திய அரசியல் அமைப்புக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானதாகும். 
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான தேர்வில், பலமுறை தேர்வில் பங்கேற்கவும், வயது வரம்பில் தளர்வையும் பெறுகின்றனர்.  அதேவேளையில், இந்த ஆண்டு பொருளாதாரத்தில் முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்த போது, அதுபோன்ற வயது தளர்வு வழங்கப்படவில்லை. 
மேலும், சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் வெற்றி பெற ஒபிசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். 9 முறை இத்தேர்வை எழுதலாம். பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 32 ஆகும். 
எனினும், 6 முறை மட்டுமே எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எஸ்சி, எஸ்டி வகுப்பு தேர்வர்கள் அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகவும், எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் எனவும் விதி உள்ளது.  ஆனால், 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பில் இதுபோன்ற வயது வரம்பில் தளர்வுகள் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்படவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 21- ஷரத்துக்கு எதிராக உள்ளது. 
எனவே, பிற பிரிவினருக்கு அளிக்கப்படுவது போல பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கும் அனைத்து அரசு வேலைத் தேர்விலும் வயது வரம்பு தளர்வை அளிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com